| ADDED : ஜூன் 30, 2024 01:35 AM
கரூர், நாட்டு கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பயனாளி சம்பந்தப்பட்ட கிராமத்தில், நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளியிடம் கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம், 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அந்த இடம் மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி திட்ட செலவினத்தில், 50 சதவீதம் பங்களிப்பு அல்லது 1.56 லட்சம் எஞ்சியுள்ள திட்ட செலவினத்தை சொந்த செலவு அல்லது வங்கிக் கடன் மூலம் திரட்ட வேண்டும்.நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான கோழி கொட்டகை, கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாத தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றுக்கான மொத்த செலவில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும், 250 எண்ணிக்கை உடைய, 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். அந்தந்த பகுதியில் உள்ள, அரசு கால்நடை மருந்தகங்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.