| ADDED : ஜூன் 09, 2024 04:31 AM
ஓசூர்: சூளகிரி அருகே, வனப்பகுதியில் மரங்களை வெட்டி சாலை அமைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பி.குருபரப்பள்ளி பஞ்., வெங்கடபதி கொட்டாய் கிராமம் அருகே, வனப்பகுதி நிலம் உள்ளது. இங்குள்ள பல மரங்களை வெட்டி, பொக்லைன் உதவியுடன் சிலர் மண் சாலை அமைத்துள்ளனர். புதிதாக அமைத்துள்ள தனியார் லேஅவுட்டிற்காக, இச்சாலை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்குள்ள, 100 க்கும் மேற்பட்ட பிளாட்டுகளை விற்பனை செய்யும் நோக்கில், வனப்பகுதி நிலத்தில் சாலை அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உரிய அனுமதியின்றி, வனப்பகுதி நிலத்தில் சாலை அமைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அத்துடன், மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி ஆகியோர் பார்வையிட்டு, சாலையை துண்டித்து, வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, மாற்று மரங்களை நட்டு, நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.