பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பர்கூரில் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பர்கூரில் அவர் பேசியதாவது:ஒரு எம்.எல்.ஏ.,வை முதல்வராக்கியதும், முதல்வரை தோற்கடித்ததும் பர்கூர் சட்டசபை தொகுதி. 146 வது சட்டசபை தொகுதியாக இன்று என் மண் என் மக்கள் பயணத்தை மேற்கொள்கிறோம். 2014 முதல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடக்கிறது.கடந்த, 9 ஆண்டுகளில் மோடி உள்பட, 76 அமைச்சர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் தமிழகத்தில், 35 அமைச்சர்கள் உள்ளனர்.இதில், 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு உள்ளது. பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, காலக்கெடுக்குள் தப்பிக்க உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். அவரது அமைச்சர், எம்.எல்.ஏ., பதவி போயுள்ளது.கடந்த ஆறு மாதமாக அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கவில்லை. அடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், மற்றொரு ஊழல் வழக்கில் பொன்முடி என மூன்று அமைச்சர்களும் சிறை செல்வது உறுதி. முதல்வர் ஸ்டாலின் ஊழலை மட்டும்தான் நண்பராக வைத்துள்ளார். அவர்களது குடும்பமே ஊழல் குடும்பம். தி.மு.க., அரசு நாற்காலியில் ஜாதி, ஊழல், குடும்பம், அடாவடி ஆகியவையே நான்கு கால்களாக உள்ளன.தி.மு.க., 6 முறை ஆட்சியமைத்து, 5 அரசு மருத்துவ கல்லுாரி, 17 தனியார் மருத்துவகல்லுாரியை திறந்து வைத்து, தனியார் கல்லுாரிகளை பினாமிகளாக வைத்து சம்பாதிக்கிறது. 9 ஆண்டு மத்திய அரசு ஆட்சியில் தமிழகத்தில், 15 அரசு மருத்துவக்கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியின் கரத்தை வலுசேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.