கிருஷ்ணகிரி, நகிருஷ்ணகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 17 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் செயற்கை கால் வழங்க, 3 நபர்களுக்கு கால் அளவீடுகள், மற்றும் 26 பேருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கினர்.கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரியில் நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில் சிகிச்சை பெற, 1,312 பேர் பதிவு செய்தனர். அவர்களுக்கு, 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயர் சிகிச்சை தேவைப்படுவோர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். மாவட்டத்தில் இதுவரை நடந்துள்ள, 16 மருத்துவ முகாமில், 30,848 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் இனியள் மண்டோதரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.