கிருஷ்ணகிரி: நிலத்தகராறில் முதியவரை, அரிவாளால் வெட்டிக்கொன்ற ராணுவ வீரர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கிருஷ்ணகிரி அடுத்த பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் பாலமுருகன், 34; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இவரது பங்காளியான ராணுவ வீரர் சூர்யா, 42; அவரது அண்ணன் பச்சையப்பன், 46, ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. கடந்த, 2013 நவ., 3 ல் மாலை, சூர்யா வீட்டருகே டூவீலரில் ஹாரன் அடித்தவாறு பாலமுருகன் சென்றுள்ளார். இதனால் அவருக்கும், சூர்யாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு பாலமுருகனின் மனைவி வனிதா, 36, மாமனார் முனியப்பன், 60, வந்துள்ளனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், முனியப்பனை, ராணுவ வீரர் சூர்யா மற்றும் பச்சையப்பன் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொன்றனர். தடுக்க வந்த பாலமுருகனை அரிவாளால் வெட்டினர்.சூர்யாவின் ஆம்னி வேனை, பாலமுருகன் தரப்பினரும், பாலமுருகனின் டூவீலரை சூர்யா தரப்பினரும் தீ வைத்து எரித்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், இரு தரப்பை சேர்ந்த, 11 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த, 10 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முனியப்பனை வெட்டி கொன்ற ராணுவ வீரர் சூர்யா, மற்றும் பச்சையப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அதேபோல் சூர்யா தரப்பினரை தாக்கி, வேனை எரித்த பாலமுருகனுக்கு ஓராண்டு சிறை, அவரது தரப்பை சேர்ந்த ராஜா, 42 என்பவருக்கு மூன்றாண்டு சிறை மற்றும் ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கி அனைவருக்கும் தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தாமோதரன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் குமரவேல் ஆஜராகினார்.