| ADDED : ஜூன் 23, 2024 04:04 AM
மதுரை: 'அவதார புருஷர்களை வழிபட்டால் விரைவில் இறையருள் பெறலாம்' என எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.மதுரை எஸ்.எஸ்.காலனி எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் காஞ்சி மஹா பெரியவரின் அனுஷ உற்ஸவத்தை முன்னிட்டு திருப்பூர் கிருஷ்ணன் 'அவதார புருஷர்கள்' என்ற தலைப்பில் பேசியதாவது: திருமணம் செய்து கொள்ளாமல் துறவு மேற்கொண்டு வாழ்ந்த ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர், மகரிஷி ரமணர் போன்றோர் அவதார புருஷர்களாக வாழ்ந்து அருள் புரிந்தவர்கள். சமஸ்கிருத பாடல்களை பொழிந்த சதாசிவ பிரம்மேந்திரர், திருமண உறவை தெய்வீக நிலைக்கு உயர்த்தி மனைவி சாரதா தேவியையே பூஜித்த ராமகிருஷ்ண பரமஹம்சர், மணம் புரிந்து கொண்டாலும் மண வாழ்வில் ஈடுபடாத வள்ளலார், ராகவேந்திரர், புத்தர் என பாரத தேசத்து துறவியர்கள் பலவகை பட்டவர்கள். கடவுளை வழிபடுவதை விட தொண்டர்களை வழிபடுவது சிறந்தது என்கிறார் கிருபானந்த வாரியார். அனுஷ பூஜை நடத்துவதின் நோக்கம் தவ வாழ்க்கை வாழ்ந்த மஹா பெரியவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். இறைவனை வழிபடுவதோடு இறைவனின் அருளை பெற்ற அவதார புருஷர்களை வழிபட்டால் இறையருளை சீக்கிரம் பெற முடியும். இறையருள் நேரடியாக கிட்டுவதை விடவும் அடியவர்களிடம் பட்டு பிரதிபலித்து அவர்கள் மூலம் கிட்டுவது இன்னும் வலிமை வாய்ந்தது. எனவே தான் காஞ்சி மஹா பெரியவர் போன்ற அவதார புருஷர்களை அவர்கள் அவதரித்த புனித நாளில் வழிபடுகிறோம் என்றார். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.