| ADDED : மே 15, 2024 06:12 AM
கொட்டாம்பட்டி : வீரசூடாமணிபட்டியில் சட்டவிரோதமாக ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை பயன்படுத்துவதால் ஒருபுறம் குடிநீர் வீணாவதும், மறுபுறம் குடிநீருக்காக அலைந்து திரியும் அவலமும் உள்ளது.வீரசூடாமணிபட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் இரண்டு இடங்களில் போர்வெல் அமைத்து தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. சப்ளை துவங்கி 10 நிமிடம் வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது. பிற பகுதிகளுக்கு செல்வதில்லை. ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் மூலம் தண்ணீர் பிடிப்பதே இதற்கு காரணம் என்பது மக்களின் குற்றச்சாட்டு.பொதுமக்கள் கூறியதாவது: ஜல்ஜீவன் திட்ட ஒப்பந்ததார பணியாளர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் லஞ்சம் கொடுத்து ஒரே வீட்டுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளைப் பெற்றுள்ளனர். மேலும் குழாயில் அடைப்பானை கழற்றியும், மோட்டாரை கொண்டு உறிஞ்சுவதாலும் பிற பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் தேடி அலைகிறோம். கூடுதல் இணைப்பு குறித்து கேட்கும் அதிகாரிகளிடம், ஒரே வீட்டில் வசிக்கும் சகோதரர்களுக்குரிய இணைப்புகள் எனக் கூறுகின்றனர்.இரண்டு, மூன்று குழாய்கள் மூலம் பெறும் குடிநீரை கால்நடைகளை குளிப்பாட்டவும், தென்னை மரத்திற்கும் பாய்ச்சுகின்றனர். இதுபற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து ஒன்றுக்கு மேலான இணைப்புகளை துண்டிக்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் என்றனர். ஒப்பந்ததாரர் அப்துல் முத்தலிபு கூறுகையில், ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்புதான் கொடுத்துள்ளோம் என்றார்.துணை பி.டி.ஓ., முத்தையா கூறுகையில், ஏற்கனவே ஆய்வு செய்து சட்டவிரோத இணைப்புகளை அகற்றினோம். தற்போது புகார் வருவதால் உடனே ஆய்வு செய்து அகற்றப்படும்என்றார்.