மதுரை:'வந்து பார்...' என நெஞ்சை நிமிர்த்திய வீரர்களும், 'நின்னு பார்...' என திமிலை சிலுப்பிய காளைகளும், அனல் பறக்க களம் கண்ட மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு அதகளப்பட்டு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பரவசமடையச் செய்தது.உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு, முனியாண்டி கோவில் திடல் வாடிவாசலில் காலை 7:00 மணிக்கு வீரர்கள் உறுதிமொழியேற்புடன் துவங்கியது. அமைச்சர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார்; அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், கலெக்டர் சங்கீதா முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதலில் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. முதல் சுற்றில் 40 மாடுகள் களம் இறக்கிவிடப்பட்டதில் 7 காளைகளை மட்டுமே வீரர்கள் அடக்கி பரிசு வென்றனர்.தலா 50 வீரர்கள் என 10 சுற்றுகளாக 1,000க்கும் மேற்பட்ட மாடுகள் களம் இறக்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆக்ரோஷமாக பார்வையில் மிரட்டி வாடிவாசல் வெளியே துள்ளிக் குதித்த மாடுகளை தாவி, திமில்களை பிடித்து வீரர்கள் அடக்கினர். திமில் பிடித்த வீரர்களை துாக்கி வீசின, காளைகள்.கெத்து காட்டிய காளைகளுக்கும், தொட்டு அடக்கிய வீரர்களுக்கும் தங்கக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, மெத்தை, சேர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் விழா குழுவினரால் கொடுக்கப்பட்டன.காளைகளின் கொம்புகள் குத்தியும், துாக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்தும் வீரர்கள், போலீசார், பார்வையாளர்கள் என 83 பேர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில் நேற்று விமரிசையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில், உற்சாகமாக பங்கேற்ற காளைகளும், காளையர்களும்.
அண்ணாமலை காளைக்கு
தங்கக்காசுபா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையின் காளை வெற்றி பெற்றது. காளையுடன் வந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறித்த தங்கக்காசை அமைச்சர் உதயநிதி வழங்கினார். சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளையும் அண்ணாமலையின் காளை வென்றது.
தங்க மோதிரங்களில்ஸ்டாலின், உதயநிதி படங்கள்
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், காளைகளுக்கு அமைச்சர் மூர்த்தி சார்பில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உருவப்படம் பொறித்த தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.போட்டியை மாலை 5:00 மணிக்கு முடிக்க திட்டமிட்ட நிலையில் காளைகள் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் கூடுதலாக ஒரு மணிநேரம் போட்டி நடத்தப்பட்டது. ஒன்பதாவது சுற்று முடிந்த நிலையில் தலா 11 காளைகளை அடக்கி 3 பேர் முதலிடத்தில் இருந்தனர். இதனால் அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் அனைவரையும் 10வது சுற்றில் களம் இறக்கியதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.
உயிரிழப்பு இல்லை உதயநிதி மகிழ்ச்சி
அலங்காநல்லுாரில் நடந்த ஜல்லிக்கட்டை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி, 5 மணி நேரம் கேலரியில் அமர்ந்து போட்டியை பார்வையிட்டார். அவர் கூறுகையில், ''ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகள் இல்லாமல் நடத்துவதே குறிக்கோள். கார், பைக், தங்கக்காசு என முதல்வர், அமைச்சர்கள் சார்பில் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன,'' என்றார்.