| ADDED : டிச 28, 2025 06:14 AM
தேனி: நரம்பியல் துறை டாக்டர் மீனாட்சி சுந்தரத்திற்கு தேனியில் டாக்டர் சி.பழனியப்பன் நினைவு விருது வழங்கப்பட்டது. தேனியை சேர்ந்த இயற்பியல் ஆய்வாளர் டாக்டர் பழனியப்பன். இவர் சோலார் எனர்ஜி பற்றி பல ஆய்வுகள் மேற்கொண்டு சாதனை புரிந்தார். இவரது நினைவாக விருது வழங்கும் விழா, 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவ தத்தெடுப்பு நிகழ்ச்சி தேனி நலம் மருத்துவமனை, சன் பெஸ்ட் சோலார் தயாரிப்புகள் நிறுவனம் சார்பில் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனத்தலைவர் சந்திரமோகன், எஸ்.பி., சினேஹாபிரியா, சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் விவேக் குமார், வனத்துறை உதவி அலுவலர் சாய்சரண்ரெட்டி பங்கேற்றனர். டாக்டர் பழனியப்பன் நினைவு விருதுகள் போலீஸ் ஐ.ஜி.,பாலகிருஷ்ணன், மதுரை நரம்பியல் துறை டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நலம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜ்குமார் பேசுகையில், 'சர்க்கரை நோய் பாதிப்பில் 40 வயதிற்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுவது டைப் 2 சர்க்கரையாகும். குழந்தைகளை பாதிப்பது 'டைப் 1' வகை சர்க்கரை நோயாகும். டைப் 1 வகையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் எனக்கூறி, இந்நோய் அறிகுறிகள், அதற்கான காரணம் பற்றி விளக்கினார். டைப் 1 வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நலம் காப்போம் திட்டத்தில் பயனடைந்தவர்கள், புதிதாக தேர்வான குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பாலசங்கா குழும நிர்வாகி கதிரேசன் நன்றி கூறினார்.