மதுரை: மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மதுரை கே.கே.நகர் - அண்ணாநகர் இடையே சிவகங்கை ரோடு மேலமடை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண இச்சந்திப்பில் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. 2023 அக்.30 ல் இப்பாலத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நான்குவழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் நீளம் 950 மீட்டர், அகலம் இருபுறமும் தலா 7.5 மீட்டர் ரோடும், அதன்கீழ் சர்வீஸ் ரோடு, ரவுண்டானா மற்றும் 2 புறமும் தலா 1.5 மீட்டர் அகலத்தில் வடிகால் என கட்டப்பட்டுள்ளது. இப்பாலப் பணிகள் முடிவடைந்து வீரமங்கை வேலுநாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலின் இப்பாலத்தை திறந்து வைத்தார். காலை 9:50 மணிக்கு அங்குள்ள மேடைக்கு வந்த முதல்வர் இதனை திறந்து வைத்தபின் நுாறு அடிதுாரம் நடந்து சென்று அதன்பின் வேனில் ஏறி முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க சென்றார். அவருடன் அமைச்சர்கள் நேரு, வேலு, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, தியாகராஜன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்.பி.,க்கள் தங்கத்தமிழ்ச் செல்வன், மாணிக்கம் தாகூர், கலெக்டர் பிரவீன்குமார், அரசுச் செயலர் செல்வராஜ், சிறப்பு அலுவலர் சந்திரசேகர், தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் செல்வநம்பி, கோட்டப் பொறியாளர்கள் மோகனகாந்தி, பிரசன்ன வெங்கடேசன், உதவி கோட்ட பொறியாளர்கள் ஆனந்த், உதவிப்பொறியாளர் குருபிரகாஷ், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், நாட்ஸ் இந்தியா ஒப்பந்ததாரர்கள் மீனாட்சிசுந்தரம், பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.