உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விசாகா கமிட்டி செயல்பாடு குறித்து அரசுப்பணியாளர்கள் வலியுறுத்தல்

விசாகா கமிட்டி செயல்பாடு குறித்து அரசுப்பணியாளர்கள் வலியுறுத்தல்

மதுரை:''பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பாக கருதப்படும் விசாகா கமிட்டி செயல்பாடு இன்றி உள்ளது. எனவே அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பத்து பெண்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவும், புகார் அளிக்கவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும் விசாகா கமிட்டி அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் நிறுவனத்தின் உயர்பொறுப்பில் உள்ள பெண் ஒருவர் தலைவராகவும், சமூக செயல்பாட்டில் அக்கறையுள்ள, சட்ட அறிவுள்ள பெண் பணியாளர்கள் 2 பேர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதி ஒருவர் உறுப்பினராகவும் இருக்க வேண்டும் என விதிகளில் உள்ளது. ஆனால் இக்கமிட்டி செயல்பாடின்றி உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயகணேஷ் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:அலுவலகங்களில் கீழ்நிலை பெண் பணியாளர்கள், ஆண் அலுவலர்களின் பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்லாமல் மனதுக்குள் பொதிந்து வைத்து பணிபுரிகின்றனர். பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்காதது, பெண் அலுவலர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த வன்முறையை தடுக்க முடியாமல் உள்ளது.இதில் ஈடுபடும் ஆண் அலுவலர்களுக்கு தண்டனை வழங்குவதைவிட, முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம் விசாகா கமிட்டி வழிகாட்டுதல் வழங்கிய நாளான ஆக., 13ல் அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்க வேண்டும். மாதம் ஒருநாள் அலுவலகங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். கமிட்டியின் தலைவர், உறுப்பினர் பட்டியலை பார்வைக்கு வைப்பதுடன், இச்சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். கமிட்டியின் பணியை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி