உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குடிநீரின்றி  தண்ணீ காட்டுறாங்க. ரூ.100 கோடிக்கு மேல் விளையாட்டு அரங்குகள் இருந்தும்

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குடிநீரின்றி  தண்ணீ காட்டுறாங்க. ரூ.100 கோடிக்கு மேல் விளையாட்டு அரங்குகள் இருந்தும்

மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான விளையாட்டு அரங்குகள் உபகரணங்கள் இருந்தாலும் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் வசதியில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட 5 வகை விளையாட்டுகளுக்கான 140 மாணவர்கள் தங்கும் விளையாட்டு விடுதி உள்ளது. இங்குள்ள மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் படித்தாலும் மூன்று வேளை உணவு, தங்குமிடம் இங்கு தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'போர்வெல்' தண்ணீரை இயந்திரம் மூலம் சுத்திகரித்து குடிநீராக விடுதியில் வழங்கப்படுகிறது. திட்டமிட்டு மூன்று வேளையும் உணவு நிபுணர்கள் பரிந்துரைத்த பட்டியல் படி உணவு வழங்குகின்றனர். குடிநீரில் விடுதி நிர்வாகமே, மாவட்ட விளையாட்டு அலுவலகமோ கவனம் செலுத்தவில்லை. பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்டம், மாவட்டம், மண்டல அளவிலான தடகள, குழு விளையாட்டுப் போட்டிகள், பல்கலை அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான தடகள, குழுப் போட்டிகள் என ஆண்டில் பெரும்பாலான நாட்கள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்படுகிறது. சமீபத்தில் 400 மீட்டர் சிந்தடிக் டிராக் புதுப்பிக்கப்பட்டது. ரூ.10.55 கோடியில் சர்வதேச ஹாக்கி டிராக் புதுப்பிக்கப்பட்டு பார்வையாளர் காலரி அமைக்கப்பட்டது. ஸ்டார் அகாடமி அமைக்கப்பட்டு 'வெயிட் லிப்டிங்' மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒலிம்பிக் அகாடமி மூலம் கபடி, டேபிள் டென்னிஸ், ஜிம் வசதி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக 50 மீட்டர் நீளத்திற்கு சர்வதேச நீச்சல்குளம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர டேபிள் டென்னிஸ், பாட்மின்டன், ஜிம்னாஸ்டிக் அரங்குகள் மூலம் தினசரி காலை, மாலையில் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். மைதானத்திற்குள் வந்தால் அவரவர் தண்ணீர் பாட்டிலை எடுத்து வரவேண்டியது கட்டாயம். பள்ளி, கல்லுாரி, அரசுத்துறை போட்டிகள் நடக்கும் போது மட்டும் 'மினரல் வாட்டர் கேன்கள்' நுாற்றுக்கணக்கில் வாங்கப்படுகின்றன. இவ்வளவு வசதிகள் செய்தும் ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் மாநகராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நடவடிக்கையில் சுணக்கம் காட்டுகிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழும் புதிய குடிநீர் இணைப்பு பெறவில்லை.

கழிப்பறைகள் கம்மி

ரூ.நுாறு கோடி மதிப்பிலான கட்டடங்கள், விளையாட்டுக்கருவிகள் இருந்தாலும் கழிப்பறைகளின் எண்ணிக்கை சொற்பமாக உள்ளது. தடகள டிராக்கையொட்டியுள்ள பார்வையாளர் காலரியின் பின்பக்க பகுதிகளில் போதுமான அளவு இடம் உள்ளதால் ஆண், பெண்களுக்கு கூடுதல் கழிப்பறைகள் கட்ட வேண்டும். அதேபோல மாநகராட்சி அல்லது மத்திய அரசின் குடிநீர் இணைப்பை பெற மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N S
டிச 10, 2025 10:44

விளையாட்டு துறை அமைச்சர் பெயரை கெடுக்க சதி. தரணி போற்றும் திராவிட மாடல் ஆட்சியில் இவ்வாறு நடக்க வாய்ப்பே இல்லை. களிப்பறை, குடி தண்ணீர் வசதிகள் எல்லாம் முறையாக செய்யப்பட்டுள்ளது. அதன் பின்தான் விளையாட்டு அரங்கங்கள் திறக்கப்பட்டன. வங்கி கடனில் வாங்கிய கிணற்றை காணவில்லை. அவ்வளவுதான்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை