| ADDED : ஜூலை 01, 2024 03:58 AM
நாமக்கல்: மோகனுார் தாலுகா, செவந்திப்பட்டி அடுத்த வடவத்துார் கிராமத்தில், தலைமலை வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது.இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காகவும், கிரிவலப்பாதையை மேம்படுத்தும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலின் பேரில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவித்தார்.பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தலைமலை கோவிலின் மேல் மலையில், குடிநீர், மின்சார வசதி, சுகாதார வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைமலை வெங்கடாஜலபதி கோவிலில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, நிதி ஒதுக்கீடு செய்ததை வரவேற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கு, கோவில் பரம்பரை அறங்காவலர் நந்தகோபன் நன்றி தெரிவித்துள்ளார்.