| ADDED : மே 29, 2024 07:30 AM
ப.வேலுார், : பொத்தனுாரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகாசி மாதம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா, கடந்த, 12ல் காப்பு கட்டுதல், கோவில் முன்பு கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தொடர்ந்து, தினமும் அபிஷேகம் ஆராதனை நடந்தது. மேலும் காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி சுவாமியை வழிபட்டனர். கடந்த, 24ல் பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 27ல் தேர் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு கோவில் முன் தீக்குண்டம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து, பொத்தனுார் காவிரி ஆற்றுக்கு சென்று ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பூவாரி போட்டுக்கொண்டனர். இன்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும், உடலில் சேறு பூசிக்கொண்டும் சுவாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.நாளை அதிகாலை, 5:00 மணிக்கு கிடா வெட்டுதல், கம்பம் காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லுதல், மஞ்சள் நீராடுதலுடன் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.