நாமக்கல்: 'பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா மாறுதலுக்கு எளிதாக விண்ணப்பிக்க வசதியாக, 'தமிழ் நிலம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.inஎன்ற இணையதளத்தை, 'நிக்' என்றழைக்கப்படும் தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கியுள்ளது. அதில், பட்டா மாறுதலுக்கான தமிழ் நிலம் கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்க வசதியாக https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் (ஊரகம்), மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக, 'கொலாப்லேண்ட்' மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, 'அ-' பதிவேடு, அரசு புறம்போக்கு நிலவிபரம், புலப்படம், நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விபரங்களை அறியும் www.eservices.tn.gov.inஎன்ற இணையதளமும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்க பட்டியல்கள் விபரங்கள் போன்றவைகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழக மாவட்டம், வட்டம், கிராமம், மாநகராட்சி, நகராட்சிகளின் விபரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவைகளையும் இந்த இணையதளத்தில் அறியலாம்.எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் 'தமிழ் நிலம்' செயலி மூலம் நில அளவை தொடர்பான விபரங்களை பார்வையிட்டுப் பயனடையலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.