| ADDED : ஆக 22, 2011 01:55 AM
ப.வேலூர்: காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை, ப.வேலூர் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். ப.வேலூர், கிழக்குத்தெரு பகவதியம்மன் கோவில் பின்புறம் காசு வைத்து சூதாடுவதாக, மாவட்ட எஸ்.பி., பிரவேஸ்குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, டி.எஸ்.பி., தம்பிதுரை மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பூபால் மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, காசு வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதை தொடர்ந்து, காசு வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (35), நல்லேந்திரன் (42), நரசிம்மன் (27), பெரியசாமி (25), சூரியபிரகாஷ் (28) ஆகிய ஐந்து பேரை, போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். ப.வேலூர் பகுதியில் தொடர்ந்து சூதாட்டம் நடந்து வருவதும், அவர்களை போலீஸார் பிடிப்பதும் வாடிக்கையாக அரங்கேறி வருகிறது. அதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே. சூதாட்ட மோகத்தால் தங்களது பணம், நகை உள்ளிட்டவற்றை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இத்தகைய நிலை ஏற்படுவதை தவிர்க்க, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.