நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, வரும், 19ல், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.நாமக்கல் நகரின் மத்தியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில், சாந்த சொரூபியாக கைகூப்பி வணங்கிய கோலத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். தினமும், காலை, 9:00 மணிக்கு, 1,008 வடை மாலை சாத்துபடி செய்யப்படும்.தொடர்ந்து, 10:00 மணிக்கு அபிஷேகம் நடக்கும். மார்கழி மாதம் அமாவாசை தினத்தில், மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் பிறந்ததாக ஐதீகம். இதையொட்டி, ஆண்டுதோறும் அந்த நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு, வரும், 19ல், மார்கழி அமாவாசை, மூலம் நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடைமாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடக்கிறது.அதையடுத்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், பால், தயிர், திருமஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைதொடர்ந்து, சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்படும். ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.