நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம், 547 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.தொடர்ந்து, கொல்லிமலை, சித்துார்நாடு பகுதியை சேர்ந்த செல்லதுரை மகன் ரனிஷ், 3, என்ற சிறுவனுக்கு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்ககோரி பெறப்பட்ட மனுவின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களுக்கு கூட்டத்திலேயே, மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை, கலெக்டர் உமா வழங்கினார்.மேலும், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய, இரண்டு பேருக்கு, மறுவாழ்வு நிதி உதவித்தொகையாக, தலா, 50,000 ரூபாய் வீதம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, 750 ரூபாய் மதிப்பில், கைதாங்கியும் வழங்கப்பட்டது.டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.