பள்ளிகளை சுத்தம் செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுரை
மேட்டுப்பாளையம்: அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என, கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். காரமடை வட்டாரத்தில், 123 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக பள்ளிகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.அதனால் பெரும்பாலான பள்ளிகளில், மழையின் காரணமாக செடிகள் வளர்ந்துள்ளன. வீசிய காற்றால் குப்பை குவிந்துள்ளன. ஜூன் மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக, பள்ளிகளை சுத்தம் செய்ய வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து காரமடை வட்டார கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது: காரமடை வட்டாரத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு, ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 3,4,5 ஆகிய தேதிகளில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து, மராமத்து பணிகள் செய்ய வேண்டும். கழிப்பிடம் சீர் செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என அறிவித்துள்ளோம்.