| ADDED : ஜூலை 22, 2024 02:32 AM
ஊட்டி;ஊட்டியில் நடந்த விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், 36 மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கைக்காக துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியதாவது:நீலகிரி மாவட்டத்தில் வாழை கன்றுகள் வினியோகம் செய்வதை ஆய்வு செய்யுமாறு விதை ஆய்வாளர் மற்றும் தரமற்ற கன்றுகள் வினியோகம், அதன் தரம் ஆகியவை குறித்து இடைத்தரகர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், விடுபட்ட விவசாயிகளுக்கு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.'மாவட்டத்தில் தேயிலை கொள்முதல் செய்யும் ஏஜென்ட்கள் மற்றும் இடைத்தரகர்களின் தராசுகளை கடைகள் மற்றும் அளவுகள் துறையின் மூலம், திடீர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,' என, துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார் வட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்கள் விற்பனை செய்வதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்த பின், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க உரங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், கால்நடை துறை மூலம் விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க அவர்களின் தேவைகள் குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இவ்வாறு, கலெக்டர் கூறினார்.கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) கவுசிக், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) அனிதா மற்றும் உதவி இயக்குனர் பபிதா உட்பட, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.