கோத்தகிரி;நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக மக்களின் கிராமங்களில், 'ஹரிக்கட்டுதல்' என்ற தானிய திருவிழா கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகு சமுதாய மக்களின் குலதெய்வமான 'ஹிரியோடைய்யா' திருவிழா ஆண்டுதோறும், ஜூலை மாதம் நடக்கிறது.இவ்விழாவை ஒட்டி, நேற்று முன்தினம், கிராம கோவிலில் இருந்து சங்கொலி எழுப்பி, 'பனகுடி' என்ற வனக்கோயிலுக்கு பக்தர்கள் சென்றனர்.ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைத்திறக்கப்படும் இக்கோவிலில், முதல் கன்றுக்குட்டி ஈன்ற பசும்பால், கொம்பு தேன் மற்றும் தும்பையை வைத்து, பிரம்புகளை உரசி, அதிலிருந்து வெளியேறிய தீப்பொறி கொண்டு, நெய்தீபம் ஏற்றியப்பின் ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.பக்தர்கள் கலாச்சாரம் உடையுடன், காணிக்கை செலுத்தி ஐயனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை, கிராம கோவில் அருகில் அமைந்துள்ள 'ஹக்கபக்க' கோவிலில், வனப்பகுதியில் இருந்து சேகரித்து வந்த மூங்கில் தழைகளை கயிறாக நெய்து கட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள கல் துாணில், எள் மற்றும் பருத்தியை கொண்டு நெய்தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜை நடத்துவதன் மூலம், உணவு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.இவ்விழா, 'ஹக்கபக்க' அமைந்துள்ள கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி, டி. மணியட்டி மற்றும் பனஹட்டி உள்ளிட்ட கிராமங்களில் சிறப்பாக நடந்தது.
மண்டை தண்டு...!
கோத்தகிரி பொரங்காடு சீமைக்கு உட்பட்ட தாந்தநாடு தொட்டூரில் 'மண்டை தண்டு' விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், வெளியூர்களிலிருந்து, தாந்தநாடு தொட்டூருக்கு திருமணமாகி, முதல் ஆண்குழந்தை பெற்றெடுத்த பெண்கள், கலாச்சார உடையுடன், பழங்கால ஆபரணங்கள் அணிந்து, குழந்தைகளுடன், கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, காணிக்கை செலுத்தி, சிறப்பு பூஜை வழிபாடு நடத்தினர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.