ஊட்டியில் மழை ஓய்ந்து இதமான காலநிலை; சுற்றுலா பயணியர் குதுாகலம்
ஊட்டி : ஊட்டியில் மழை சற்று ஓய்ந்து இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து குதுாகலமடைந்தனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கன மழை பெய்தது. மழையால் கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் மற்றும் பிற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்தது. பகல் நேரங்களில் வெயில் தென்படுகிறது. ஊட்டியில் நேற்று நிலவிய இதமான காலநிலைக்கு கர்நாடகா, கேரளா சுற்றுலா பயணியர் படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்து குதுாகலம் அடைந்தனர். வார இறுதி நாட்கள் என்பதால், பிற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து காணப்பட்டது.