| ADDED : ஜூலை 05, 2024 01:58 AM
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே கிளன்மார்கன் மற்றும் கக்குச்சி கிராமங்கள் உள்ளன. அங்கு, '15 மற்றும் 17 வயதான இரண்டு பெண் குழந்தைகளுக்கு, அவர்கள் பெற்றோர் கட்டாய திருமணம் நடத்தி வைக்க உள்ளனர்' என, மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீனா தேவி, குழந்தை பாதுகாப்பு அதிகாரி தாஹினிதேவி ஆகியோருக்கு நேன்று முன்தினம் புகார் வந்தது. உடனடியாக, அதிகாரிகள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியரின் பெற்றோர், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தது உறுதியானது. அதிகாரிகள் அவர்களிடம் பேசி, 'குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம்; திருமண வயது அடைந்தவுடன் திருமணம் செய்து வையுங்கள்' என, அறிவுரை கூறினர்.ஆனால், பெற்றோர் அதை கேட்கவில்லை. திருமணம் செய்து வைப்பதில் குறியாக இருந்தனர். தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தாஹினிதேவி, ஊட்டி மாவட்ட கோர்ட்டில், குழந்தை திருமணத்தை தடுத்த நிறுத்தக் கோரி மனு தாக்கல் செய்தார்.விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குறிப்பிட்ட பகுதிகளின் போலீசாரை அழைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று, குழந்தை திருமணம் நடைபெறாமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி செந்தில்குமார், 'குழந்தை திருமணம் நடத்த கூடாது' என, தடையாணை வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து, ஊட்டியில் நடக்கவிருந்த இரு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.