இரவில் ஏற்பட்ட வனத் தீ ;போராடி கட்டுப்படுத்திய வனத்துறை
கூடலுார்;கூடலுார் முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் வறட்சியினாலும், வனதீயினாலும், வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், முதுமலை ஒட்டிய கூடலுார், தொரப்பள்ளி அள்ளூர்வயல் பகுதியில், உள்ள மூங்கில் காட்டில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு திடீரென வனத்தீ ஏற்பட்டு எரியத் துவங்கியது.கூடலுார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், உதவி அலுவலர் சங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுாரில் தொடரும் வறட்சியினால், அடிக்கடி வனத்தீ ஏற்பட்டு,வனப்பகுதி கருகி சாம்பலாகி வருவதால், அதனை சார்ந்துள்ள பல தாவரங்கள், பூச்சிகள் சிறிய உயிரினங்கள் அழியும் சூழல் உள்ளது. வனத்தீயை தடுக்க, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்களின் நியமிக்க வேண்டும்,' என்றனர்.