| ADDED : ஆக 18, 2024 01:32 AM
ஊட்டி;ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து காணப்பட்டது.நீலகிரி மாவட்டம் ஊட்டியில், கடந்த மாதம் சில நாட்கள் பலத்த காற்றுடன் நீடித்த மழை கடந்த இரு வாரங்களாக குறைந்துள்ளது. மழையால் கடுங்குளிர் நிலவியதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரின் வருகை அடியோடு குறைந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில், சுதந்திர தின விழா மற்றும் வார விடுமுறை என, தொடர் விடுமுறையில், ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களை கண்டுக்களிக்க, கேரளா மற்றும் கர்நாடகா உட்பட, சமவெளி பகுதிகளில் இருந்து, குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணியர், நேற்று இதமான காலநிலையை அனுபவித்தனர். குறிப்பாக, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவை கண்டுக்களித்த சுற்றுலா பயணியர், படகு இல்லத்தில், படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர்.