| ADDED : ஜன 17, 2024 12:39 AM
கூடலுார்;முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த பொங்கல் விழாவில் சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்றனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, அபாயரண்யம் யானைகள் முகாமில், 27 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர்.இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள், வளர்ப்பு யானைகள் பங்கேற்கும் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது.நடப்பாண்டுக்கான பொங்கல் விழா நேற்று மாலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்தது. இதற்காக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து அலங்கரிக்கப்பட்டன.முகாம் வளாகத்தில், வளர்ப்பு யானைகள் கிருஷ்ணர், பாமா, காமாட்சி, சந்தோஷ் அணிவகுத்து நிற்க, 8 மண் பானைகளில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். மாவட்ட கலெக்டர் அருணா துவக்கி வைத்தார். முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ், எஸ்.பி., சுந்தரவடிவேல், முதுமலை துணை இயக்குனர்கள் வித்யா, அருண் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, உறியடி போட்டி நடந்தது. மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினர். இறுதியில், ஆதிவாசிகளின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.திரளான சுற்றுலா பயணிகள் பங்கேற்று மகிழ்ச்சி அடைந்தனர். விழாவில், வனச்சரகர்கள், வன ஊழியர்கள், யானை பாகன்கள், பழங்குடியினர் உட்பட உள்ளூர் மக்கள் பங்கேற்றனர்.