மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்: உதவி உபகரணங்கள் பெற அழைப்பு
ஊட்டி:மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் பெற சிறப்பு முகாம் நடக்கிறது.நீலகிரியில், இதுவரை, 9 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதில், மத்திய அரசு வாயிலாக வழங்கப்படும் பிரத்தியேகமான தேசிய அடையாள அட்டை 7 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு மூலம் உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் காது மிஷின், பேட்டரி, வீல் சேர், செயற்கை கால், ஊன்றுகோல் உட்பட மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் கூறுகையில், '' ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று சிறப்பு முகாம் நடக்கிறது. இம்மாதம், 27-ம் தேதி குன்னூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி உதவி உபகரணங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.'' என்றார்.