பந்தலுார், : 'பந்தலுார் பஜாரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு வீடு வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுார் பஜாரை சேர்ந்தவர் சந்திரன்,65. இவரது மனைவி வல்சலா,54. மகன் சிவதாசன்,30. இவர்கள் மூன்று பேரும் மாற்றுத்திறனாளிகள். கணவன் மனைவி இருவருக்கும் உடலளவில் பாதிப்பும், மகன் சிவதாசன் மூளை வளர்ச்சி குன்றியும் உள்ளது.இவர்களுக்கு வீடு வசதி இல்லாத நிலையில், பந்தலுார் மைதானத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, கூட்ட அரங்கை வீடாக மாற்றி குடியேறினர். கடந்த, 20 ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வரும் சந்திரன், இலவச வீடு கேட்டு, மாவட்ட கலெக்டர், அமைச்சர் என அனைவரிடமும் நேரில் மனு அளித்துள்ளார்.இவரின் கோரிக்கை குறித்து யாரும், செவிமடுக்காத நிலையில், தற்போது மேல் கூரை முழுவதுமாக சேதமடைந்து, முன்பக்க ஷட்டரும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை காலத்தில் மூவரும் மிகவும் அவதிப்படுகின்றனர்.சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை கொண்டு, காலை மற்றும் மதிய நேரங்களில் அம்மா உணவக உணவும், இரவில் வெறும் தண்ணீரும் குடித்துவிட்டு வாழ்கின்றனர்.தண்ணீர் வசதி இல்லாத நிலையில் அருகே உள்ள வீடுகளில், தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்த போதும், சமைக்க வழி இல்லாததால், தினசரி இரவுகள் பசியுடன் போகிறது.சந்திரன் கூறுகையில், ''மழை பெய்தால் உள்ளே உட்கார கூட முடியாத நிலை உள்ளது. அரசு அதிகாரிகள்; மக்கள் ஆதரவு கரம் நீட்டவில்லை. மழை, பனி காலத்தில் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். மாவட்ட நிர்வாகம் அரசின் இலவச வீடு கட்டி கொடுத்தால், எங்களின் இறுதி வாழ்க்கை நிம்மதியாகும்,'' என்றார்.