| ADDED : ஜன 30, 2024 12:35 AM
கூடலுார்;முதுமலையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனப்பகுதியில், 8 இடங்களில் சோலார் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் குற்றங்களை தடுக்க வேட்டை தடுப்பு முகாம்கள் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், வனப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனத்தீ ஏற்படுவதை அறிந்து, அதனை தடுக்கவும் வனப்பகுதியில், 8 இடங்களில் சோலார் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் கோபுரங்கள் வைத்து அமைக்கப்பட்டுள்ளது.அதில், பதிவாகும் காட்சிகளை தெப்பக்காடு கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.வனத்துறையினர் கூறுகையில்,'முதுமலை வனப்பகுதிகள் அமைக்கப்பட்டுள்ள வேட்டை தடுப்பு முகாம்களில், ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், சுழற்சி முறையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதனால், வேட்டை மற்றும் வனம் குற்றங்களை தடுக்கவும், வனத்தீ ஏற்பட்டால் உடனடியாக தடுக்கவும் உதவியாக இருக்கும்,' என்றனர்.