ஊருக்குள் புகுந்த முதலை கிராம மக்கள் கவலை
கூடலூர் : கூடலூர் புத்தூர் வயல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆறு அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் மீட்டு, பாண்டியாறு பொன்னம்புழா ஆற்றில் விட்டனர். கூடலூர் புத்தூர்வயல் பகுதியில் உள்ள மகாவிஷ்ணு கோவிலில் நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் பஜனை முடிந்து இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பினர். இவர்கள் தேவசம் அருகில் இஞ்சி தோட்டத்தில் நடந்து செல்லும்போது, தோட்டத்தில் முதலை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்; கூடலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் பெருமாள், டிரைவர் சிவக்குமார் அப்பகுதிக்கு சென்று, அங்கிருந்த ஆறு அடி நீள முதலையை பிடிக்க முயற்சித்தனர். அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் இரண்டு மணி நேர போராட்டத்துக்குப்பின் முதலையை பிடித்து, வாயை கட்டினர். பின்னர் முதலையை ஆட்டோவில், கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதிக்கு எடுத்து சென்று, பாண்டியாறு-பொன்னம்புழா ஆற்றில் விட்டனர். கடந்த ஆண்டு புத்தூர்வயல் பகுதியில் முதலையை பார்த்ததாக சிலர் கூறியபோது, யாரும் அதை ஏற்கவில்லை. தற்போது, இப்பகுதியில் முதலை பிடிக்கப்பட்டிருப்பது குடியிருப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.