உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 400ல் இருந்து ஒரு ஏக்கராக குறைந்த நெல் விவசாயம்; அழிவின் பாதையில் பழங்குடியினரின் பாரம்பரிய தொழில்

400ல் இருந்து ஒரு ஏக்கராக குறைந்த நெல் விவசாயம்; அழிவின் பாதையில் பழங்குடியினரின் பாரம்பரிய தொழில்

கூடலுார்: கூடலுாரில் அதிகளவில் பழங்குடியினர் வாழும் புளியாம்பாறை உட்பட சில பகுதிகளில், 400 ஏக்கரில் நடந்த நெல் விவசாயம் தற்போது, ஒரு ஏக்கராக குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் சுற்றுப்புற பகுதியில், தேயிலை, காபி, குறுமிளகு, கிராம்பு தவிர, வயல்வெளிகளில் குறுகிய காலத்தில் பயன் தரும் நெல் மற்றும் காய்கறி உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில், பருவமழை காலத்தில் பூர்வ குடிகளான மவுண்டான் செட்டி மற்றும் பழங் குடியின விவசாயிகள், 1000 ஏக்கரில் பழமையான, 'கருவாளி, சேத்துவாளி, மரநெல், கந்தகசால், கோதண்டன், கொடவெளியன், சிந்தார்மனி, வெலும்பாலை, காடைகண்ணன், ஐ.ஆர்., 8, ஐ.ஆர்., 20, பாரதி,' ஆகிய நெல் வகைகளை நடவு செய்து அறுவடை செய்து வந்தனர். அதில், புளியாம்பாறை மற்றும் அதனை ஒட்டிய, 'அட்டி கொல்லி, கரளிகண்டி, மன்னிமூலா, சேப்பட்டி, புலிய வயல், அத்துார், கொள்ளூர், கொட்டக் குன்னி,' ஆகிய பகுதிகளில், 400 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் மட்டும் நடந்து வந்தது. அழிவின் பிடியில் குல தொழில் இந்நிலையில், காலநிலை மாற்றம், பாசன நீர் பற்றாக்குறை, தொழிலாளர்கள் குறைவு போன்ற காரணங்களால், பல விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக நேந்திரன் வாழை, இஞ்சி விவசாயத்துக்கு மாறினர். இதனால், கூடலுார், பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், 1000 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட நெல் விவசாயம், 100 ஏக்கருக்கும் குறைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, 400 ஏக்கர் பயிரிடப்பட்ட புளியம்பாறை சுற்றுப்புபகுதியில் நடப்பு ஆண்டு இரு விவசாயிகள் மட்டும், தலா அரை ஏக்கர் வீதம் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் மேற்கொண்டுள்ளனர். இதனால், மலையில் மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளின் குல தொழில் அழிவின் பிடியில் உள்ளது. உழவு மாடுகள் அழிந்ததால் சிக்கல் புளியம்பாறை பகுதி நெல் விவசாயி மோகன் கூறுகையில், ''முன்பு இங்கு உழவு மாடுகளை கொண்டு உழவு பணிகள் மேற்கொண்டு, விவசாயம் செய்தனர். உற்பத்தி செலவு குறைவாக இருந்தது. மாடுகள் அழிந்த நிலையில், வாடகை டிராக்டரில் வயல்களில் உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர். இடு பொருள்களின் விலை உயர்வு, தொழிலாளர் சம்பள உயர்வு போன்ற காரணங்களால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. காட்டு யானைகள் வயலை சேதப்படுத்துவதால், நெல் பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது. இங்கு நெல் கொள்முதல் மையம் இல்லாததால் விற்பனை செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது,'' என்றார்.

நெல் உற்பத்திக்கு ஏற்ற காலநிலை

கூடலுாரில் உள்ள வீரிய ஒட்டு ரக ஆராய்ச்சி மைய தலைவர் ராஜா கூறுகையில், ''இரு வழி வீரிய ஒட்டு நெல் உற்பத்தி செய்ய, இரண்டு ரகங்கள் தேவை. அதில், பெண் ரகத்தினை உற்பத்தி செய்ய ஏற்ற, வெப்பநிலை கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் இருப்பதால், இப்பகுதி தேர்வு செய்யப்பட்டு, விதை உற்பத்தி செய்யப் படுகிறது. மேலும், கூடலுாரில், அனைத்து நெல் ரகங்களையும் உற்பத்தி செய்ய ஏற்ற காலநிலை இருப்பது இதன் தனி சிறப்பு. இங்கு நெல் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை வேண்டும் ,''என்றார்.

உழவுக்கு உயிர் கொடுங்கள்...!

புளியாம்பாறை பகுதியில், கோவை வேளாண் பல்கலைக்கழக வீரிய ஓட்டுனர் ஆராய்ச்சி மையத்தை அரசு அமைத்து புதிய விதை நெல் வகைகளை உற்பத்தி செய்து வருகிறது. இங்கு நெல் அறுவடைக்கு முன் பழங்குடியினர், கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், பல நுாற்றாண்டுகளாக, ஐப்பசி, 10ம் நாள், 'பூ புத்தரி' அறுவடை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். நெல் விவசாயம் அழிந்து வருவதால், வரும் காலங்களில் இத்தகைய பாரம்பரிய பண்டிகைகள் நடக்குமா என்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை போக்கும் வகையில், உழவுக்கு உயிர் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி