| ADDED : ஜூலை 02, 2024 05:34 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே சுற்றுலாப்பகுதியான தனுஷ்கோடியில் சேதமடைந்த குடிசையில் பாதுகாப்பின்றி தபால் நிலையம் செயல்படுகிறது.புனித மற்றும் வணிக நகரமாக விளங்கிய தனுஷ்கோடி 1964ல் ஏற்பட்ட புயலில் உருக்குலைந்தது. இங்குள்ள தபால் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதிகள் இடிந்து தரைமட்டமாயின. அன்று முதல் தனுஷ்கோடிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் 2017ல் பிரதமர் மோடி உத்தரவின்படி 9.5 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.இதனையடுத்து 53 ஆண்டுகளுக்கு பின் 2017 பிப்., 22ல் தனுஷ்கோடியில் கிளை தபால் நிலையம் திறக்கப்பட்டு குடிசையில் இயங்கியது. இதன்மூலம் இங்குள்ள 200க்கு மேற்பட்ட மீனவர்கள், ஓட்டல் நடத்தும் வியாபாரிகள் பலரும் சேமிப்பு கணக்கை துவக்கி பணம் சேமிக்கும் பழக்கமும் உருவாகியது. இது மீனவர்களிடம் வரவேற்பை பெற்றது.இங்கு வீசிய சூறைக்காற்றில் ஓராண்டாக தபால் நிலைய குடிசை முற்றிலும் பெயர்ந்து மழைநீர் புகும் அவல நிலை உள்ளது. இதனால் சேமிப்பு கணக்கு புத்தகம், பதிவேடுகளை ராமேஸ்வரம் தலைமை தபால் நிலையத்திற்கு ஊழியர் எடுத்துச் செல்வதும், காலையில் பணிக்கு வரும் போது மீண்டும் சுமந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே இங்கு நிரந்தர கட்டடத்தில் தபால் நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.