| ADDED : ஜூலை 22, 2024 01:00 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் இளமனுார் கிழக்குப்பகுதியில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு தரை மட்டமானது. அங்கிருந்தவர்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்றதால் உயிர் தப்பினர்.இளமனுார் கிழக்குப்பகுதியை சேர்ந்தவர் முனியசாமி 55, இவரது மனைவி காந்திமதி 51. இவர்களது மகன் கதிராமு 42, சுதாராணி 35, இவர்களது மகன் சுர்ஜித்குமார் 12, மகள் ரியா ஸ்ரீ 10, ஆகியோர் அருகே அருகே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று குடும்பத்தோடு அனைவரும்அழகன்குளம் அருகேயுள்ள அத்தியூத்து பகுதியில் குலதெய்வ கோயிலுக்கு காலை 9:00 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.கோயிலில் இருந்த போது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வெடி சத்தம் கேட்டு வீடு இடிந்துவிட்டதாக அலைபேசி மூலம் காலை 10:40 மணிக்கு தெரிவித்தனர். திரும்பி வந்து பார்த்த போது வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமாகியிருந்தது. தீயணைப்புத்துறையினர் காஸ் சிலிண்டர் வெடித்ததால் தான் வீடு இடிந்ததாக தெரிவித்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் உட்பட அனைத்தும் கருகி சேதமடைந்தது. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து சுதாராணி கூறியதாவது: எனது மாமனார் முனியசாமியின் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகிவிட்டது. வீட்டில் இருந்த இரண்டேகால் பவுன் தங்கநகையும் உருத்தெரியாமல் அழிந்து விட்டது. அருகில் உள்ள எங்களது வீடும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தங்க இடமின்றி கிராமத்தில் உள்ள மகளிர் மன்ற கட்டடத்தில் தற்காலிகமாக தங்கி கொள்ள அனுமதித்துள்ளனர். அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்றார்.