| ADDED : ஜூன் 14, 2024 04:43 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மொ.கடம்பன்குளம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூகாளியன் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா நடந்தது.மொ.கடம்பன்குளம் கிராமத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூகாளியன் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு, பொங்கல் விழா நடக்கிறது.மானாமதுரையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.தினந்தோறும் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மானாமதுரையில் மண்ணால் செய்து கொண்டு வரப்பட்ட இருளப்பசுவாமி கோயிலில் இருந்து குதிரை, காளை மாடு, விநாயகர், முருகன், கருப்பணசாமி, அம்மன், நாகர் சிலை, தவழும் பிள்ளைகள் பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக விநாயகர் கோயிலுக்கு கொண்டு சென்றனர்.கடந்த ஆண்டு விளைந்த தானியங்கள் வைத்து சிறப்பு பூஜை மற்றும் கண் திறப்பு செய்யப்பட்டது.கிராமத்தின் முக்கிய வீதியில் துாக்கிச் சென்று மூகாளியன் அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.