| ADDED : ஜூன் 01, 2024 04:24 AM
பரமக்குடி: பரமக்குடியில் அடிக்கடிமின்தடை, குறைவழுத்த மின்சாரம் விநியோகத்தால் மக்கள் துாக்கம் தொலைப்பதுடன், மின் உபகரணங்கள் செயல் இழப்பால் அவதியடைகின்றனர்.பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடியில் உப மின் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் சப்ளை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி அறிவிப்பில்லாத மின் தடை ஏற்படுகிறது. பல மணி நேரம் வரை குறைவழுத்த மின் விநியோகம் தொடர்கிறது. பகல், இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும் நிலையில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை துாக்கத்தை தொலைத்துஉள்ளனர்.மருத்துவமனைகள், வணிக நிறுவனங்களில் அத்தியாவசிய தேவைக்கு மின் விநியோகம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. பல நேரங்களில் குறைவழுத்த மின் விநியோகத்தால் மின் உபகரணங்கள் செயல் இழப்பதால் பொருளாதார ரீதியில் பாதிப்படைகின்றனர். மின்கட்டணத்தை தடையின்றி பெற்றுக் கொள்ளும் மின் வாரியம் கோடை காலங்களில் மின்தேவையை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.