| ADDED : ஜூலை 18, 2024 10:39 PM
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம் நடந்தது. அப்போது திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது.இக்கோயிலில் ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.ஆடி பிரம்மோற்ஸவ விழாவின் 6 ம் நாளில் நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் மாப்பிள்ளை திருக்கோலத்தில் யானை வாகனத்தில் அலங்காரமாகினார்.இரவு 7:00 மணிக்கு ரத வீதிகளில் வலம் வந்தார். அப்போது கோயில் வளாகத்தில் உற்ஸவர் ஆண்டாள் கையில் கிளி ஏந்தி வண்ண மாலைகள் சூடி அலங்காரமாகி மண்டபத்தில் எழுந்தருளினார்.இரவு 8:00 மணிக்கு மேள தாளங்கள் முழங்க சுந்தரராஜ பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து பெருமாள், ஆண்டாள் திருவடிகளுக்கு விசேஷ அபிஷேகம் நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திருமண வரன் மற்றும் குழந்தை பேறு வேண்டியும், வேண்டுதல் நிறைவேறிய ஆண் மற்றும் பெண் பக்தர்கள் ஆண்டாள், பெருமாளுக்கு மாலைகளை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று இரவு பூப்பல்லக்கில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பட்டணப்பிரவேசம் வருகிறார்.