| ADDED : ஜூன் 30, 2024 02:22 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் தகராறில் வாடகை வேன்கள் மீது பெட்ரோல் குண்டு, கற்களை வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்த அண்ணன், தம்பி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் வாடகை வேன், கார் ஸ்டாண்ட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கார் டிரைவர் ராமநாதபுரம் உச்சிப்புளி அருகே வெள்ளரிமாவலசையை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் 27, நண்பர்களுடன் ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அங்கிருந்து வேன் டிரைவர்கள் சிலர் விலகி விட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கார்த்திக் தனது அண்ணன் முனீஸ்வரன் 31, உறவினனர் காளீஸ்வரன் 32, ஆகியோரை வரவழைத்து மூவரும் வேன் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.இதில் வேனில் தீ பரவாமல் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் 3 வேன்களின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி உடைத்து விட்டு மூவரும் காரில் தப்பினர். இதையடுத்து ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி மண்டபம் அருகே குஞ்சார்வலசை சோதனைச் சாவடி போலீசாரை உஷார்படுத்தினார்.அங்கிருந்த போலீசார் காரை மடக்கி 3 பேரையும் கைது செய்தனர். காயமடைந்த கார்த்திக் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிசைக்கு அனுமதிக்கப்பட்டார். மற்ற இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.