| ADDED : பிப் 15, 2024 05:11 AM
சாயல்குடி: திருப்புல்லாணியில் இருந்து கீழக்கரை, சிக்கல், சாயல்குடி மற்றும் கன்னிராஜபுரம் வரை 50க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ளதால் பஸ் பயணிகள் வேதனையில் தவிக்கின்றனர்.கடந்த 2023 நவ., மாதத்தில் ஏராளமான புதிய வேகத்தடைகள் உருவாகின. புதிய முறையற்ற வேகத்தடைகளால் நாள்தோறும் ஏராளமான பஸ் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். சாயல்குடியைச் சேர்ந்த பஸ் பயணிகள் கூறியதாவது:திருப்புல்லாணியில் இருந்து கன்னிராஜபுரம் வரை உள்ள 70 கி.மீ., கிழக்கு கடற்கரை சாலையில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாயல்குடி வழியாக திருச்செந்துார், கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கின்றனர்.கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆபத்தான முக்கிய வளைவுகளில் வேகத்தடை இன்றியமையாதது. ஆனால் அரசின் உரிய அனுமதியின்றி குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயரமான அளவில் வேகத்தடை அமைத்துள்ளனர். இதனால் கார் உள்ளிட்ட வாகனங்களின் அடிப்பகுதி சேதமடைகின்றது.அரசு பஸ்களில் கடைசி இருக்கையில் அமர்ந்திருப்போர் வேகத்தடைகளின் பாதிப்பால் துாக்கி வீசப்படுகின்றனர். இதனால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடையே அடிக்கடி வாக்குவாதம் செய்யும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். முதியவர்கள் வேகத்தடையால் பின் சீட்டில் அமரும் போது முதுகு தண்டுவடம் வலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே உரிய அனுமதியின்றி நோக்கம் போல் அமைக்கப்பட்ட வேகத்தடைகளின் அளவை குறைக்கவும், அவற்றில் விபத்து எச்சரிக்கையான ரிப்ளக்கடர் ஸ்டிக்கர் பதிப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.