| ADDED : டிச 27, 2025 04:28 AM
திருவாடானை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களால் தங்களின் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வலைகள் சேதமடைந்துள்ளதாக இலங்கையிலிருந்து விடுதலையான நம்புதாளை மீனவர்கள் கவலை தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது தொடர்ந்து நடக்கிறது. மீனவர்களின் விசைப்படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்கின்றனர். நவ.,3 ல் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையைச் சேர்ந்த ரமேஷ் நாட்டுப்படகில் அதே கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் 42, பாலமுருகன் 30, தினேஷ் 18, ராமு 22, ஆகியோர் மீன் பிடிக்கச்சென்றனர். அன்று மதியம் 1:00 மணிக்கு மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அந்நாட்டு எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி 4 பேரையும் கைது செய்தனர். அவர்களின் நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர். டிச.,13ல் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நான்கு பேரையும் விடுதலை செய்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு இந்திய கடலோர காவல் படை ராணி துர்காதேவி கப்பலில் நாகபட்டினம் ஆற்காடுதுறை மீன்வளத்துறை அலுவலகத்திற்கு அவர்கள் வந்தனர். அவர்களை தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் மற்றும் அலுவலர்கள் அங்கிருந்து அழைத்து வந்தனர். மீனவர்கள் கூறியதாவது: எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டியடிப்பது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது போன்ற அத்துமீறல்களை தொடர்ந்து செய்து வருகிறது. எங்களுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்புள்ள வலைகளை சேதப்படுத்தியுள்ளனர். திருப்பி எங்களிடம் ஒப்படைக்கவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.