| ADDED : ஜன 25, 2024 05:01 AM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையை சேர்ந்தவரிடம் முகநுால் பக்கத்தில்வேலை வாய்ப்பு இருப்பதாக விளம்பரம் செய்து ஏமாற்றி ரூ.4.83 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.வேதாளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமுகமது 45. இவர் ராமநாதபுரம் ஜவுளிக்கடையில் விற்பனை பிரிவில் வேலை செய்கிறார். இவரது முகநுால் பக்கத்தில் 'டவர் அலர்ட்' என்ற தலைப்பில் மக்கா, மதீனாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராஜா முகமதுவிடம் மருத்துவ பரிசோதனை, காப்பீடு, டிபாசிட், டிக்கெட், விசா ஆகியவற்றிற்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். இவரது இரண்டு நண்பர்களுக்கும் சேர்த்து இரு வங்கி கணக்கில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் வழங்கிய 5 வங்கி கணக்கிற்கும், கூகுள் பே மூலமும் பல தவணைகளாக ரூ.4.83 லட்சம் அனுப்பினார். பணம் பெற்றவர்கள் வேலை வாய்ப்பு முயற்சியில் ஈடுபடாமல் தொடர்ந்து பணம் கேட்டதால் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது ஏமாற்றுக்காரர்கள் என தெரிய வந்தது. இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் ராஜா முகமது புகார் செய்தார்.சந்தீஷ் எஸ்.பி., உத்தரவின் பேரில் போலீசார் டவர் அலர்ட் என்ற முகநுால் பக்கத்தின் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.