| ADDED : பிப் 06, 2024 11:25 PM
திருவாடானை: நெல் ஆதார விலையை குவிண்டாலுக்கு 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தி.மு.க., தேர்தல் அறிக்கை குழுவிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக துாத்துக்குடியில் இக்கூட்டம் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கவாஸ்கர் கலந்து கொண்டு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் ைஹட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. தெலுங்கானா மாநிலம் போல் பட்டாதாரர்களுக்கு பருவத்திற்கு ரூ.5000 வழங்கும் மானியத் திட்டம் போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும்.உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் நெல்லின் ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்க வேண்டும். காவிரி, குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி ஆறு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதரத்தை காப்பாற்ற வேண்டும். வைகை அணை நீர் வீணாக செல்வதை தடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று பெரிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். 1500 யூனியன் கண்மாய்களை நீர்வளத்துறையின் கீழ் சேர்த்து துார்வார வேண்டும். வண்டல் மண் எடுப்பதற்கு தாசில்தார் அனுமதி அளிக்கும் படியான நடைமுறையை அமல்படுத்த வேண்டும். புதிதாக நவீன அரவை அரிசி ஆலை அமைக்க வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வரும் வைகை நீரை, திருவாடானை தாலுகாவிற்கு கொண்டு வரவேண்டும். நீர் நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஆர்.எஸ்.மங்கலத்தில் குண்டு மிளகாய் களம், கோடவுன் அமைக்க வேண்டும். கணினியில் ஏற்றபட்ட பட்டாவில் உள்ள பிழைகளை சரி செய்ய மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். களரி, கூத்தன் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். திருவாடானை அல்லது ஆர்.எஸ்.மங்கலத்தில் பஸ் டிப்போ அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.