ராமநாதபுரம்: துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் வெள்ள நீரில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தும் இதுவரை வழங்காததால் கடன் வாங்கி பயிரிட்ட ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரி, கண்மாய் பாசனத்தில் 4 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. இதே போல 50 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன்னதாகவே வயலை தயார் செய்து சாகுபடி செய்கின்றனர்.ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவிப்பட்டினம், சத்திரக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயராக இருந்தன. கடந்தாண்டு டிசல் 4 நாட்களாக தொடர் மழையால் ஊருணி, கண்மாய் வரத்துக்கால்வாய் உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகள் வெள்ளக்காடாக மாறியது.குறிப்பாக சாயல்குடி, கடலாடி, நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர், சாயல்குடி, கமுதி, முதுகுளத்துார் பகுதியில் நெல், மிளகாய், பருத்தி செடிகள் 50 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.இதனால் துாத்துக்குடி, திருநேல்வேலி மாவட்டங்களுடன் ராமநாதபுரத்திற்கும் வெள்ள நிவாரணம் வழங்க அறிவித்தது. இருப்பினும் ஒரு மாதமாகியும் இதுவரை வழங்கப்படாமல் கிடப்பில் விட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எம்.கவாஸ்கர் கூறுகையில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை பகுதியில் 25 ஆயிரம் ஏக்கரில் அறுவடை நேரத்தில் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது. வருவாய்துறையினர் பெயரளவில் ஒருசில ஊர்களில் மட்டும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.அதற்கும் நிவாரணம் வரவில்லை. இந்நிலையில் விடுபட்ட பகுதியில் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் சேர்க்கப்படும் என்கிறனர். கூட்டுறவு வங்கி, தனியாரிடம் கடன் வாங்கிய விவசாயிகள் வட்டி கூட கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்தி விரைவில் வெள்ள நிவாரணம் ஏக்கருக்கு ரூ.8000 வழங்க வேண்டும் என்றார்.