| ADDED : ஆக 05, 2011 12:05 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு தொய்வு காரணமாக தொடரும்
திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு புதிதாக
பொறுப்பேற்றுள்ள எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரோந்து பணி
இல்லாததால் இரவில் திருட்டுகள், வழிப்பறிகள் சர்வசாதாரணமாகிவிட்டது. கடந்த
சில தினங்களுக்கு முன் ரெகுநாதபுரம் அருகே அ.தி.மு.க., பிரமுகர் சாத்மிக
சீலனை பணத்திற்காக மூன்று பேர் கொலை செய்தனர். ராமநாதபுரம் நகரில் காலை 6
முதல் இரவு 12 மணி வரை மது விற்பனை தடையின்றி நடக்கிறது. தெருக்களில் டீ
கடை, பெட்டி கடைகளும் 'பார்' ஆக மாறிவிட்டன. 'குடி'மகன்கள் தொல்லையால் பல
இடங்களில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாரதிநகர் பகுதியில் விபச்சாரம்
அமோகமாக நடந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருமங்கலம் சிறுமி
விபச்சார கும்பலிடமிருந்து மீட்கப்பட்டார். மாவட்டத்தில் அவ்வப்போது
அடையாளம் தெரியாத பெண் பிணங்கள் கிடப்பது, விபச்சார கும்பலிடம் சிக்கிய
பெண்களாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நிலமோசடி வழக்குகள்
தொடர்பாக புகார்கள் குவிந்துள்ள நிலையில் ஒரு வழக்கு மட்டுமே
பதியப்பட்டுள்ளது.நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகள் உள்ளிட்டவற்றை
தீர்க்க நேற்று முதல் பொறுப்பேற்றுள்ள காளிராஜ் மகேஷ்குமார் எஸ்.பி.,
நடவடிக்கை எடுக்க வேண்டும்.