| ADDED : ஜன 13, 2024 01:24 AM
ராமநாதபுரம்:பொங்கல் பண்டிகையால் தேவை அதிகரிப்பு, பனிப்பொழிவால் மண்டபம், வெளியூர்களில் இருந்தும் மல்லிகை வரத்து குறைவால் ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் கிலோ ரூ.1000த்திற்கு விற்ற மல்லிகைப் பூ நேற்று 3 மடங்கு விலை அதிகரித்து கிலோ ரூ.3000 முதல் ரூ.3500 வரைவிற்றது.ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், மண்டபம் பகுதியில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. இங்கு உற்பத்தியாகும் மல்லிகை பூக்கள் பங்குனி, சித்திரை மாதம் சீசன் காலத்தில் கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது. அதுவே சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ.1500 முதல் ரூ.4000 வரை விற்கப்படுகிறது.தற்போது பனிப்பொழிவால் மண்டபம், தங்கச்சிமடம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூக்கள் வரத்து குறைந்ததால் ராமநாதபுரத்தில் விலை உயர்ந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்ட மலர் வணிக சங்கத் தலைவர் கே.முருகன் கூறுகையில், பொங்கல் பண்டிகை எதிரொலியாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ ரூ.1000 வரை விற்ற மல்லிகை நேற்று ரூ.3000 முதல் ரூ.3500 வரை விற்கப்பட்டது. இதே போல கனகாம்பரம் ரூ.2500, முல்லை ரூ.2000, ரோஜா ரூ.550 என வழக்கத்தை விட இருமடங்கு பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்றார்.