| ADDED : டிச 27, 2025 05:25 AM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் நடப்பதை போன்று ஒவ்வொரு விழாக்களும் கோலாகலமாக நடந்து வருகிறது. கார்த்திகை முதல் நாளன்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கி ஐயப்ப பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் முன்புறமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தில் டிச., 18 ல் கொடிப் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை குருசாமி மோகன் சரணகோஷம் முழங்க கொடிப் பட்டம் ஏற்றி வைத்தார். பின்னர் பூதபலி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. நேற்று அதிகாலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனையும், மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில் உற்ஸவ மூர்த்தியான வல்லபை ஐயப்பன் பள்ளி வேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளங்கள் முழங்க ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடியவாறு ரெகுநாதபுரம் நகர் வீதியில் உலா வந்தனர். இரவில் கூட்டு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அதிகாலையில் கோபூஜையும், ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளல் மற்றும் கோயில் அருகே உள்ள பஸ்மகுளத்தில் உற்ஸவமூர்த்திக்கு ஆராட்டு நிகழ்ச்சி, மகா அபிஷேகம், அன்னதானம் உள்ளிட்டவைகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.