| ADDED : மார் 06, 2024 04:53 AM
ராமநாதபுரம் : -கடின உழைப்பும் விடா முயற்சியும் தான் ஒருவரது வாழ்க்கையில் எந்த துறையிலும் வெற்றியைத் தேடித் தர முடியும், என காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் ஜி.ரவி பேசினார்.ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியில் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் ஜி.ரவி பங்கேற்று 800 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முதுகலையில் 3 பேருக்கு தங்க பதக்கம் உட்பட 96 பேருக்கும், இளங்கலையில் 4 பேருக்கு தங்க பதக்கம் உட்பட 704 பேருக்கும், 54 பல்கலை தர வரிசை பெற்ற மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.அவர் பேசியதாவது:இந்த கல்லுாரி மாணவர்கள் 7 தங்கப் பதக்கங்களும், 54 பல்கலை தர வரிசையும் பெற்றுள்ளனர். இங்கு 2660 மாணவர்கள் 14 இளங்கலை பட்டப்பிரிவு, 7 முதுகலை பட்டப்பிரிவுகளில் படிக்கின்றனர். பட்டங்களை பெறும் பட்டதாரிகள் கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் தான் வாழ்க்கையில் எந்த துறையிலும் வெற்றி காண முடியும். இன்று போட்டி நிறைந்த உலகில் இளைஞர்கள் கணினித் திறன், தகவல் தொடர்புத் திறன், குழு வேலைத்திறன், தகவமைப்பு திறன் என அனைத்து திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தகவல் தொடர்புத்திறன் தான் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்ற போது 0.1 மில்லியன் மாணவர்கள் 20 பல்கலைகள், 500 கல்லுாரிகள் இருந்தன. இன்று 45 ஆயிரம் கல்லுாரிகள், 1026 பல்கலைகள் உள்ளன. உயர் கல்வித்திறன் தேசிய அளவில் சராசரியாக 27.1 சதவீதமாகவுள்ளது. தமிழகத்தில் 51.4 சதவீதமாக தேசிய அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியா அசாத்தியமான வளர்ச்சியை பெற்றுள்ளது. விரைவில் வல்லரசாக மாறும். மாணவர்கள் சில இலக்குககளை வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். தோல்விகள் எப்போதும் தற்காலிகமானவை. அவை உங்கள் இலக்கை நெருங்கும் படிக்கட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.