| ADDED : ஜன 25, 2024 12:55 PM
சேலம் : சேலத்தில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மூதாட்டியிடம், 9.2 பவுன் செயின் பறிக்கப்பட்டது.சேலம், சூரமங்கலம், நெடுஞ்சாலை நகரில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. கடந்த, 21 காலை, 7:30 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதனால், கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்நிலையில், விழாவில் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மனைவி சகுந்தலா, 72, என்பவர் அணிந்திருந்த, 9.2 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.