உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / களம் இறங்கிய போட்டி வேட்பாளர்களால் மாநகர தி.மு.க., வுக்கு கூடுதல் நெருக்கடி

களம் இறங்கிய போட்டி வேட்பாளர்களால் மாநகர தி.மு.க., வுக்கு கூடுதல் நெருக்கடி

சேலம்:சேலம் மாநகராட்சி தேர்தலில், தி.மு.க., வில் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள், நேற்று சுயேட்சையாக போட்டியிட, வேட்பு மனுவைத்தாக்கல் செய்தனர். போட்டி வேட்பாளர்களாக களம் இறங்குவது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.க., வேட்பாளர்கள் இடையே, 'கிலியை' ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாநகராட்சி தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலருக்கு, 'கல்தா' கொடுக்கப்பட்டது. 'சிட்டிங்' கவுன்சிலர், வார்டு செயலாளர்கள் உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்தனர். வார்டில், பொதுமக்களிடம் தங்களுக்கு உள்ள செல்வாக்கு, கட்சி நிர்வாகிகளின் ஆதரவு ஆகியவற்றை கணக்கிட்டு, பலர் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்தனர்.ஆனால், தங்கள் முடிவை வெளிப்படையாக தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர். நேற்று முன்தினம், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனுவைத்தாக்கல் செய்தனர். நேற்று, தி.மு.க., அதிருப்தியாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்து, தாங்கள் போட்டியிடுவதை உறுதி செய்தனர்.மாநகராட்சி நான்காவது வார்டில், தி.மு.க., சிட்டிங் கவுன்சிலர் தினகரன், 14 வது வார்டில், தி.மு.க., சிட்டிங் கவுன்சிலர் நடேசன், 15 வது வார்டில், தி.மு.க., பிரமுகர் வேலன், 12 வது வார்டில், தி.மு.க., பிரமுகர் உஷாராணி, 29 வது வார்டில், தி.மு.க., வார்டு செயலாளர் பிரகாசம், 30 வது வார்டில் சேகர் உள்ளிட்டார் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.தி.மு.க., வினரின் இந்த அதிரடியால், மாநகர தி.மு.க., வுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க.,- காங்., உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே, தனித்தனியாக களம் இறங்குவதால், கடுமையான போட்டி இருக்கும் என்று தி.மு.க., வினர் கருதினர்.இந்நிலையில், தி.மு.க., வினருக்கு, அக்கட்சியை சேர்ந்தவர்களே போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளது, தி.மு.க., வேட்பாளர்கள் இடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., வினர் நேற்று வெளிப்படையாக, வேட்பு மனுவைத்தாக்கல் செய்ததால், மாநகராட்சியின் பிற வார்டுகளிலும், தி.மு.க., அதிருப்தியாளர்கள், விரைவில், சுயேட்சையாக களம் இறங்க, வேட்பு மனுவைத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, பல வார்டுகளில் வாய்ப்பை பெற்ற, தி.மு.க., வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மாநகர, தி.மு.க., வுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தி.மு.க., வை போல குறிப்பிட்ட சில வார்டுகளில், அ.தி.மு.க., வை சேர்ந்தவர்கள் சுயேட்சையாக களம் இறங்கும் முடிவில் இருக்கின்றனர். விரைவில், ஒரு சில வார்டுகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி