ஆத்துார்: அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:மேட்டூர் - ஆத்துார், நரசிங்கபுரம் காவிரி குடிநீர் திட்டத்தில், பழைய குழாய்களை மாற்றுவதற்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அப்பணியை மேற்கொள்ளவில்லை. இதனால், ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை. 'நீட்' தேர்வு விலக்கு பெறுவதாக, தமிழகம் முழுதும், தி.மு.க.,வினர் கையெழுத்து வாங்கி அவற்றை, ஜனாதிபதிக்கு அனுப்புவதாக கூறினர். ஆனால் கையெழுத்து வாங்கிய அட்டைகளை, தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில் குப்பையில் வீசினர். இதன்மூலம் 'நீட்' தேர்வு குறித்து மாணவர்களை, தி.மு.க., ஏமாற்றி வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவற்றை கண்டித்து, பிப்., 1ல்(இன்று), ஆத்துார் நகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.மாவட்ட செயலராகிய நான் தலைமை வகிக்கிறேன். நகர செயலர் மோகன் வரவேற்கிறார். எம்.எல்.ஏ.,க்கள் மணி, சுந்தரராஜன், ராஜமுத்து, நல்லதம்பி, சித்ரா முன்னிலை வகிக்கின்றனர். கொள்கை பரப்பு துணை செயலர் விந்தியா, எம்.பி., சந்திரசேகரன், ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் பேசுகின்றனர். கட்சி முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் பங்கேற்க வேண்டும்.