| ADDED : நவ 22, 2025 01:17 AM
கெங்கவல்லி, மதுபோதையில், உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்ட மரச்சிற்பி உயிரிழந்தார்.கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 55. மரச்சிற்பியான இவர், செந்தாரப்பட்டி டவுன் பஞ்., அலுவலகம் அருகே இருந்த இடத்தை, சில மாதங்களுக்கு முன் விற்று விட்டு, காந்தி நகரில் உள்ள மகள் மகாலட்சுமி வீட்டில், மனைவி மகேஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த, 18ல், கெங்கவல்லியில் உள்ள சகோதரி சாந்தி வீட்டிற்கு வந்துள்ளார். மன விரக்தி யில் இருந்த அவர், தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தார். மூன்று நாட்களாக மது அருந்தியபடி இருந்துள்ளார். நேற்று காலை, 11:30 மணியளவில் கெங்கவல்லி முஸ்லிம் மயானம் அருகில், தனக்கு தானே உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். தீப்பற்றி எரிந்த பின், தீ தாக்கம் குறைந்ததும், கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு சாலையில் நடந்து சென்றுள்ளார்.இதை பார்த்த பொதுமக்கள், கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தீக்காயமடைந்த சுரேஷ்குமாரை, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு, 7:30 மணியளவில் அவர் உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.